Monday, 9 November 2020

முட்டாள்த்தனமான புத்திசாலியும் புத்திசாலித்தனமான முட்டாளும்

ஒரு ஊரே ஒன்னு சேர்ந்து 

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள 

அந்த கிராமத்த விட்டே விரட்டி விடிக்குது... 


அவன் பேரு பார்த்தா...


இப்ப வேற வழியில்லாம 

பார்த்தா பக்கத்து ஊருக்கு போறான்


அந்த ஊருக்கு அடிக்கடி 

போய் வந்திருந்தாலும்.... 

அவனுக்குன்னு அங்க... 

யாரையும் தெரியாது... 


பசிக்க ஆரம்பிக்குது... 


கையில காசும் இல்ல... 

திருடி திங்க மனசும் இல்ல...


பசியோட... அந்த ஊருக்குள்ள 

மெல்ல நாடந்து போறான்... 


அந்த ஊருக்குள்ள 

முட்டாள்த்தனமான ஒரு புத்திசாலி 

ஒரு பெரியவர்... 


எப்ப வேணும்னாலும்... 

இந்த ஊர விட்டு இல்ல... உலகத்தை விட்டே 

போகுற நிலமையில

படுத்த படுக்கையா கிடக்கிறார்... 

அவர் பேரு சாரதி  


அந்த பெரியவர பொருத்தவரைக்கும்....

இந்த உலகத்துல... 

தான் மட்டுந்தான் புத்திசாலி.... 

மத்தவன் எல்லாம் முட்டாள்ன்னு 

ஒரு நினைப்பு...


ஆனா... அந்த பெரியவருக்கு... 

ஒரு நல்ல பழக்கம் இருக்கு..!!


என்னதான் உடம்பு சரியில்லைனாலும்... 

இரவு எத்தனை மணிக்கு தூங்கினாலும்... 

முந்தின நாள்... 

அதிகப்படியான வேலை செஞ்சிருந்தாலும்...  

தினந்தோறும் காலைல.... 

நாலு மணிக்குலாம் எந்திரிச்சி 

தன்னோட வழக்கமான வேலைய 

பார்க்க ஆரம்பிச்சிடுவார்.... 


இப்போ...

பசியோட நடந்து வந்த பார்த்தா.... 

சாரதியோட வீட்ட பார்குறான்... 


உள்ள இருந்து ஒரே இருமல் சத்தம்...

லொக்கு லொக்குன்னு  

வீட்டுக்கு வெளிய வரைக்கும் கேட்குது...


பார்த்தா... மெல்ல கதவ திறந்து 

எட்டிப்பார்க்க..... உள்ள சாரதி.... 


புத்திசாலித்தனமான முட்டாளும்... 

முட்டாள்த்தனமான புத்திசாலியும்... 

சந்திச்சிக்கிறாங்க...


பார்த்தாவை பார்த்த சாரதி... 

இருமிக்கிட்டே... யாருப்பா நீ...? 

பூட்டி இருக்குற வீட்ட 

திருடன் மாதிரி திறந்து பார்க்குற...!!

உனக்கு என்ன வேணும்..? 

என்று விசாரிக்க...


பார்த்தாவும்... நடந்த எல்லா விஷய்த்தையும் 

விலாவரியா சொல்றான்...


பார்த்தாவின் கதையை கேட்ட 

சாரதியின் மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடுது... 


இவன பார்த்தா.... 

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள மாதிரி தெரியல...

கடஞ்சி எடுத்த முட்டாள் மாதிரி தோணுது... 

மூணு வேளை சோறு போட்டா...

ஆயிசுக்கும் நமக்கு அடிமையா 

இருப்பான்னு நினைச்சி...


பசியோட வந்த பார்த்தாவுக்கு 

சாரதி, சோறு போட்டு... 

இனிமே நீ எங்கயும் போகவேண்டாம்... 

என்கூடவே இருந்திடு என்று கூற... 


பார்த்தாவும்... போக்கிடம் இல்லாம 

அங்கேயே தங்க முடிவு பண்றான்...


உடனே பார்த்தாவும் சாரதியை பார்த்து... 

சோறு போட்ட நன்றி விசுவாசத்துக்காக 


ஐயா... 

உங்களால முடியாத எல்லா வேலையையும் 

இனிமே நா பார்த்துக்கிறேன்...

உங்களுக்கு நிச்சயமா ஒத்தாசையா இருப்பேன் 

என்று கூற....


அதைக்கேட்ட சாரதி.... 

மகிழ்ச்சியோட பார்த்தவை வேலைக்கு 

வச்சிக்கிறார்.....  


அடுத்த நாள் காலை... 

சரியா மணி நாலு... 


இருமிக்கிட்டே சாரதி எந்திரிக்க... 

அந்த இருமல் சத்தம் கேட்டு 

பார்த்தாவும் எந்திரிக்க...


உடனே சாரதி.... 

பார்த்தாவை பார்த்து 


என்னடா அப்படி பாக்குற...  

தினந்தினம் நான் தான்... 

வீட்ட கூட்டி பெருக்குவேன்... 


இப்பலாம் என்னால அத செய்ய முடியல... 

இனிமே நீதா அத பண்ணனும் 

என்று கூற... 


அதற்கு பார்த்தா.... 


சரிங்க முதலாளி... 

என்று கூறிக்கொண்டே... 

எல்லா வேலையையும் செய்ய ஆரம்பிக்கிறான்... 


நாட்கள் மெல்ல நகர நகர... 

வேலையும் கூடிக்கிட்டே போகுது... 


சாரதி... 

தன்னால முடியாத எல்லா வேலையையும் 

பார்த்தாவ வச்சி செய்ய ஆரம்பிக்கிறார்...


ஏதாவது எதுத்து பேசினா... 


டேய் முட்டாப்பயலே... 

என்கிட்ட வேலைக்கு சேரும் போது... 

என்ன சொன்ன...?


ஐயா... 

உங்களால முடியாத எல்லா வேலையையும் 

இனிமே நா பார்த்துக்கிறேன்...

உங்களுக்கு நிச்சயமா 

ஒத்தாசையா இருப்பேன்னு சொன்னீல...?


மனுஷனுக்கு வாக்கு முக்கியம்டான்னு 

சொல்லிச் சொல்லி வேலை வாங்க... 


வாக்கு கொடுத்துட்டோமேன்னு 

அந்தப் பெரியவரால முடியாத 

எல்லா வேலையையும்  

பார்த்தா செய்ய ஆரம்பிக்கிறான்..   


ஒரு நாள் அந்த பெரியவருக்கு 

தீவிர உடம்பு சரியில்லாம போக...

வைத்தியர் வந்து பார்க்கிறார்... 


வைத்தியம் பார்த்த கையோட 

அந்த பெரியவர பார்த்து 

 

ஐயா... 

நா கொடுக்குற மருந்த சாப்ட்டு, 

நல்லா தூங்கி எந்திரிச்சாலே... 

பாதி சரியாகிடும்... என்று கூற 


அதற்கு சாரதி வைத்தியரை பார்த்து 


அதுதான இங்க பிரச்சனையே... 

அதிகாலை நாலு மணிக்கே 

எந்திரிச்சி பழகுன உடம்பு... 

திடீர்ன்னு வைத்தியர் சொன்னா கேட்குமா 

என்று கிண்டலாக சொல்ல... 


வைத்தியர்... வைத்தியம் பார்த்ததற்கு 

காச வாங்கிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்... 


அடுத்த நாள் காலை... 

வழக்கம் போல சாரதி எந்திரிச்சி பார்க்க... 

பக்கத்துல படுத்திருந்த பார்த்தாவ காணும்...!!


சுத்தி முத்தி தேடி பார்க்குறார்...

எங்க தேடியும் பார்த்தாவை காணும்... 


உடனே சாரதி... தனக்குத்தானே.... 

பார்த்தாவை பற்றி...


பயத்துல சொல்லாம கொள்ளாம 

ஓடிப்போய்ட்டானே... சோம்பேறிப்பயன்னு 

சொல்லி திட்டியபடி....


வேற வழியில்லாம தன்னோட வேலைய 

தானே பார்க்க ஆரம்பிக்கிறார்... 


நேரம் ஆகிக்கிட்டே போக... 

பகல் பொழுது விடிய ஆரம்பிக்குது.... 


இப்ப பார்த்தா.... சாரதியோட வீட்டுக்கு வாரான்... 


பார்த்தாவை பார்த்த சாரதி... 

கோபத்தில்... 

எங்கடா போன..? என்று கேட்க


அதற்கு பார்த்தா அமைதியாக... 


எல்லாம் உங்க உடம்பு சரியாகனும்னு  

வைத்தியர் சொன்ன ஒரு வேலைய 

பார்க்க போனேன்... என்று கூற 


ஓ.. பையன் ஓடிப்போக நினைக்கல...

நமக்காக ஒரு வேலை பார்க்கத்தான் 

போயிருக்கான்னு சாரதி சமாதானம்

ஆகிறார்...


அன்றைய நாள் மெல்ல நகர....

அடுத்த நாள் காலையும் 

பார்த்தாவை காணும்.... 


இப்படியே தினம் தினம் 

காலைல பார்த்தா காணாமல் போக... 


ஒரு நாள் கடுப்பான சாரதி... 

பார்த்தாவை பார்த்து.... 


டேய் தினமும் காலைல காணாம போயிடுற...

கேட்டா வைத்தியர் சொன்ன வேலையத்தான் 

பார்க்குறேன்னு பதில் சொல்ற...


இத்தன நாள் நீ எனக்காக 

வைத்தியர் சொன்ன வேலைய 

ஒழுங்க பார்த்திருந்தா.... 

என்னோட உடம்பு சரியாகிருக்கனும்... 


உண்மைய சொல்லு... 

தினமும் காலைல எங்க போற...? 

என்று அதட்டிக் கேட்க 


அதற்கு பார்த்தா சொன்ன பதில் 


முட்டாள்த்தனமாக இருந்தாலும்... 

சாரதிக்கு அப்ப தா புரிஞ்சது...

நாம இத்தன நாள் போட்ட கணக்கு 

தப்பு.... 


உண்மையிலேயே பார்த்தா 

வெறும் முட்டாள் இல்ல  

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள் தான்...


காரணம்... வைத்தியர் 

அந்தப் பெரியவர... நல்ல தூங்குனா 

உடம்பு பாதி சரியாகிடும்னு சொல்ல... 


பெரியவர் தூங்காததுனால... 

பாவம் அவருக்கு பதிலா... 

இவன் தூங்க போயிருக்கான்... 


சரி.... தூங்குறது தான் தூங்குற... 

நம்ம வீட்டுலேயே 

தூங்க வேண்டியது தானான்னு

கேட்டதுக்கு....


உங்க இருமல் சத்தத்துல... 

என்னோட தூக்கம் கலைஞ்சா...

உங்க உடம்பு... 

எப்படி சரியாகும்னு சொல்றான்... 


Story by  Murali K





Saturday, 19 September 2020

பிச்சைக்காரர்கள் தேவை...!!!



சில நுறு வருஷத்துக்கு முன்னாடி.... 


ஏழை என்ற சொல்லுக்கு 

சிறிதளவு கூட இடம் கொடுக்காத...! 

ஒரு பணக்கார தேசத்தை...!! 

வைரவேந்தன் என்ற அரசன் 

ஆட்சி செய்து வந்தான்...


ஒருநாள் இரவு... 

கண் அயர்ந்து தூக்கும்பொழுது, 

அந்த அரசனுக்கு ஒரு கனவு வருகிறது...


திடீர்னு... 

எதிரி நாட்டு அரசன் 

தன்னுடைய நாட்டை கைப்பற்றி

அரசனை சிறையில் தள்ளியது மட்டுமல்லாமல்... 


வாரம் ஒரு முறை.... 

அந்நாட்டு மக்களிடமே பிச்சை எடுத்து 

அரசன் உணவு உண்ண வேண்டும் என்று 

தண்டனையும் அளிக்கிறான்...! 


இப்படி ஒரு படு பயங்கரமான 

கனவு வந்ததிலிருந்து... 

அரசனுக்கு தன்னுடைய எதிர்காலம் குறித்து 

அதிக பயம் வந்துவிடுகிறது...! 


போர் செய்து... எதிரி நாட்டு அரசன் 

தன்னை பிச்சை எடுக்கவைத்து விடுவானோ..? 


ஒருவேளை இது உண்மையாக நடந்தால்...!!

தனக்கு இதைவிடப் மிகப்பெரிய அவமானம் 

வேறெதுவுமில்லை என்று 


உடனடியாக தனது படைகளை பலப்படுத்துகிறான்....! 

போர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்...!! 

எப்பொழுது வேண்டுமானாலும் போர் வரலாம்...  

தயாராக இருக்கும்படி உத்தரவிடுகிறான்...!!!


இருந்தும் பயம் போகவில்லை...!


இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்குமா..? 

என்று தெரிந்துகொள்ள... 

அரசவை ஜோதிடரை அழைத்து  

இரசியமாகக் கேட்க


அதற்கு அந்த ஜோதிடரும் 

இராப்பகலா ஓலைச்சுவடிகளை ஆராய்சி பண்ணி 

ஒரு பரிகாரத்தையும் சொல்றார்...! 


ஒரு பிச்சைக்காரன கண்டுபிடிச்சி

சரியா ஒரு வருஷத்துக்கு 

வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமாவது.

அவனுக்கு உங்க கையாள சமைச்சி 

ஒருவேளை வயிறு நிரம்பசோறு போட்டா 

இந்தக்கனவு பழிக்காதுன்னு சொல்லிவிட்டு... 


இறுதியாக.... 


அரசே... பகல் கனவு கூட 

பழிக்காமல் போகலாம்..!

தாங்கள் கண்டதோ நடுச்சாமத்தில்... 


மேலும் இந்த விஷயம் 

எதிரி நாட்டு அரசனுக்கு 

தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்... 


தெரிந்தால்...!?!? 


அனைத்து பிச்சைக்காரர்களையும் கண்டுபிடித்து, 

சோற்றில் விஷம் வைத்துக் கொன்றுவிடுவான்..!.  

ஜாக்கிரதை..!!    


பிறகு... பரிகாரம் செய்ய பிச்சைக்காரர்கள் 

கிடைக்காமல்....!

தாங்கள் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிடும்...!! 

என்று கூற....


அதைக்கேட்ட அரசனுக்கு ஒருநிமிடம் 

தூக்கிவாரி போட்டுவிடுகிறது..!! 


காரணம்... தன்னுடைய நாட்டில்  

ஏழை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது... !

அனைவரும் பணக்காரர்கள்...!!

அப்படி இருக்கும்போது... 

பிச்சைக்காரனுக்கு முதல்ல எங்க போவது...?!?!?!  


யோசிக்கிறான்... 

தூங்காமல் விடிய விடிய யோசிக்கிறான்... 


எந்த யோசனையும் வராமல் போக... 

இறுதியாக பக்கத்தில் இருக்கும் 

நட்பு நாட்டிற்கு புறாவின் மூலம் 

ஒரு தூது அனுப்புகிறான்... 


அதில்... 

நண்பா... எனக்கு உடனடியாக 

உன் நாட்டில் இருக்கும் 

ஒரு பிச்சைக்காரன் தேவை...

நீ அனுப்பி வைப்பாய் என்ற 

நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன்..

ஏன்...? எதற்கு...? என்று காரணம் கேட்காதே 

என்று எழுதியிருக்க 


அதைப்படித்த நட்பு நாட்டு அரசனுக்கு 

ஒரே குழப்பம்...


என்ன இது...?

ஒரு பணக்கார நாட்டின் அரசன்... 

பிச்சைகாரர்களை கேட்கிறாரே...?

என்று நினைத்தபடி 

அந்நாட்டில் பிச்சை எடுக்கும் ஒருவரை 

வேறுவழியின்றி அனுப்பியும் வைக்ககிறார்... 


முதல் நாள்... 

அரசன் தன்னுடைய கையால் சமைத்து... 

அந்த பிச்சைக்காரனுக்கு, 

தடபுடலாக விருந்து வைக்கிறார்...!! 


பிச்சைக்காரும் சந்தோஷமாக சாப்பிட...


நாட்கள் மெல்ல நகர்கிறது...  

ஒரு மாதம் முடியும் பொழுது... 

அந்த பிச்சைக்காரன் இறந்துவிடுகிறார்... 


பின்பு மீண்டும் ஒரு கடிதம்... 


நட்பு நாட்டு அரசன்... 

மீண்டும் ஒரு பிச்சைக்காரனை அனுப்புகிறான்..


அவனும் ஒரு மாதத்தில் இறந்து போக... 


இப்படி மறுபடியும் மறுபடியும் கடிதம் அனுப்ப.... 


நட்பு நாட்டு அரசன் 

அனுப்பி வைக்கும் பிச்சைக்காரர்கள்

அனைவரும்... வந்த ஒரு மாதத்திற்குள் இறந்துபோக....


ஒரு கட்டத்தில் வெறுப்பான நட்பு நாட்டு அரசன்...  


இப்படியே போனால்... 

மாதம் ஒருவர் என்று... 

கொஞ்சம் கொஞ்சமாக என் நாட்டு மக்களை 

கொன்றுவிடுவான்...! என்று 

பிச்சைக்காரர்களை அனுப்புவதை நிறுத்துகிறான்.!!


அதில் கடுப்பான வைரவேந்தன்... 

நட்பு நாட்டு அரசனிடம் கோபமாக... 


சாதாரண பிச்சைக்காரர்கள்....! 

அவர்களை அனுப்பிவைக்க 

உனக்கு துப்பில்ல...!!

உனக்கு எதுக்கு இந்த அரசன் என்ற பதிவி..!!! 

என்று கூற...


அதற்கு நட்பு நாட்டு அரசன்...


ஏதோ பழகிய தோஷத்திற்கு... 

பிச்சைக்காரர்களை உனக்கு பிச்சையாக 

அனுப்பி வைத்தால்... 

என்னிடமே கோபத்தில் கத்துகிறாயா..?

என்று பதிலுக்கு கேட்க... 


இருவக்கும் இடையே சண்டை முத்திப்போய்... 

நட்பு அரசன்.. எதிரியாக மாறி 

இரு நாட்டுக்கும் இடையே போராக வெடிக்கிறது.!!


இறுதியில் நட்புநாட்டு அரசன் வெற்றி பெற்று 

நாட்டை கைப்பற்றி... அரசனை சிறையும் வைத்து... 


பிச்சைக்காரர்கள் என்றால் உனக்கு 

சாதாரணமாப் போய்விட்டது..! 

பிச்சை எடுத்தால் தான்...

அவர்களுடை வலி தெரியும்...!! என்று 

வாரம் ஒருமுறை பிச்சை எடுத்து சாப்பிடு... 

அதுதான் உனக்குத் தண்டனை என்று கூற


வேறு வழியின்றி... வைரவேந்தன் 

வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் பொழுது...

ஒரு நாள் அந்த ஜோதிடர் வீடு வருகிறது... 


ஜோதிடர் அரசரை பார்த்து... 


பரிகாரத்தை சரியாக செய்திருந்தால்

இந்த நிலைமை வந்திருக்காது அரசே என்று கூற... 


அதற்கு வைரவேந்தன்... 

நீர் கூறியதைத்தான் அப்படியே செய்தேன் 

என்று சொல்ல...  


அப்படி என்ன செய்தீர்கள்...? 


வாரம் ஒருமுறை 

என் கையால் சமைத்து உணவளித்தேன்....!

என்று கூற 


பிறகு ஏன் அவர்கள் இறக்கிறார்கள்..? 

என்று ஜோதிடர் கேட்க...


அதுதான் கூறினேனே....

வாரம் ஒருமுறை என் கையால் உணவு அளித்தேன் 

என்று அழுத்தமாக கூற 


சற்று யோசித்த ஜோதிடர் 

வைரவேந்தனைப் பார்த்து 

 

அப்படியென்றால் மற்ற ஆறு நாட்கள்...?

என்று கேட்க


அதைப்பற்றி...  

நீ பரிகாரத்தில் சொல்லவே இல்லையே...?

என்றதும்.... 


ஜோதிடர்........


நீ பிச்சை எடுக்குறதுல தப்பே இல்லை...!!!!


Written by Murali K

வாசித்தமைக்கு நன்றி 🙏 

Friday, 17 April 2020

செத்து சொர்க்கத்திலாவது சந்தோஷமா இரு...!


சில நூறு வருசத்துக்கு முன்னாடி
சந்திரபுரம் என்ற தேசத்தை...
சூரியவரதன்ங்கற சூழ்ச்சிக்கார அரசன்
ஆண்டு வந்தான்...

அவனோட பொழுது போக்கே...

மக்கள் மனசுல ஆசையை தூண்டிவிடும்படி
பெரிய பரிசுத்தொகையோட
ஒரு போட்டியை அறிவிச்சி....
அதுல தோல்வியடையும் போட்டியாளர...
தூக்குல போட்டு சந்தோஷப்படுவது தான்...!

அப்படி தோற்றவர்களை...
தூக்கில் போடுவதற்கென்றே
முரட்டுத்தனமான ஒரு அடிமுட்டாளை...
வேலைக்கு வச்சிருந்தான் அந்த அரசன்.!

அந்த அடிமுட்டாள் சில சமையம்
மனம் இறங்கி... தோற்றவர்களை
கொல்லாமல் விட்டு விடுவதால்....

நீ அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும்
புனிதமான வேலை செய்கிறாய்
என்று சொல்லி... அந்த அரசன்
அடிமுட்டாளை நம்ப வைத்திருந்தான்....

அடிமுட்டாளும்....
அரசனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு
தோற்றவர்களை பார்த்து....

நீ இங்கிருந்து கஷ்டப்படுவதற்கு பதில்
செத்து சொர்கத்திலாவது
சந்தோஷமாக இரு... என்று கூறியபடி
தூக்கில் போட்டுவிடுவான்....

இப்படி இருக்கும் போது ஒருநாள்...
அரசனோட மனசுல...
வித்யாசமான ஆசை ஒன்னு தோணுது...

அதாவது...
நாம ஆசைப்படுற ஒரு விஷத்தை
நமக்காக... ஆசை ஆசையாய்...
நிறைவேத்த நினைக்கும் போது...
அத நம்ம மனசு....
வேண்டாம்னு சொல்லுற ஒன்னு இருக்கா...?

அப்படி ஒரு விஷயம் இருந்தா...,
அதை கண்டுபிடிச்சி கொடுக்குறவனுக்கு
இந்த ராஜியத்தையே பரிசாக கொடுத்து...
அரசனாக்குகிறேன்.... என்று
பொதுமக்கள் மத்தியில அறிவிக்கிறான்.

காரணம்... எப்படியும்
அத யாரும் கண்டுபிடிக்க போறது இல்ல...!
அப்படியே கண்டுபிடிச்சாலும்...,
அந்த விசயத்த...
நா வேண்டாம்னு சொல்லப்போறது இல்ல...!
அதுனால...
எவனும் ஜெயிக்க போறதும் இல்லைன்னு
ஒரு நினைப்பு...!!!

இந்த போட்டியை அறிந்த
நாட்டு மக்கள் எல்லோரும்....

யாராவது இதுல ஜெயித்து
இந்த அரசனை...
தோற்கடிக்க மாட்டாங்களான்னு
நினைக்க...
ஒருத்தன் மட்டும் போட்டியில
கலந்துக்க தயாராகுறான்....!!

போட்டி நடக்கும் நாளும் வருது...
போட்டியாளர் அரசபைக்கு வருகிறார்...

அரசனைப் பார்த்து...
உங்களுக்கு பிடித்த உணவின்
பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்க...

உடனே அரசனும்...
தனக்குப் பிடித்த உணவின் பெயரை
பட்டியலிட்டு வரிசையாகக்கூற...
அந்த உணவு அனைத்தும்
அரசன் முன் கொண்டுவரப்படுகிறது...

இப்ப... அந்த போட்டியாளர்
ராஜாவை பார்த்து....

அரசே... உங்க ஆசை தீரும் வரை
இத சாப்பிடுங்க என்று கேட்க...

அரசனும் சாப்பிட ஆரம்பிக்க...
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல
சாப்பிட முடியாமல்... போதும்னு சொல்றார்....

ஆனாலும் போட்டியாளர் விடல....

அரசே... இவை அனைத்தும் தங்களுத்தான்
சாப்பிடுங்கள் என்று ஆசை ஆசையாய் கூற...

உடனே அரசன்....
வயிறு நிரம்பிவிட்டது..
போதும்னு சொல்லிட்டேனே என்று கூற....

போட்டியாளர்... அரசனிடம்

உணவில் மட்டும் தான் அரசே....
ஆசைப்படும் பண்டம் கண்முன் இருந்தும்...
போதும் என்று சொல்லும் மனம் வரும்
என்று கூற....

அரசன்...
போட்டியாளரை பார்த்து...
புத்திசாலித்தனமாக

நான் போதும் என்று கூறினேனே தவிர...
வேண்டாம் என்று கூறவில்லையே...?!?
இவை அனைத்தும் எனக்குத்தான்...!
பசி எடுக்கும் போது... நானே சாப்பிடுகிறேன்...
இப்ப நீ தோற்றுவிட்டாய்....
என்று கூறி...

யார் அங்கே... இவனை...
அந்த அடிமுட்டாளிடம் அனுப்பி
பொதுமக்கள் மத்தியில்
தூக்கிலிட சொல்லுங்கள்...

இந்த நாட்டிற்கு அரசனாக துடிக்கும்
அனைவருக்கும் இதுதான் கதி என்று
எல்லோருக்கும் புரியட்டும்...
என்று கூற

அந்த அடிமுட்டாளும்...
"செத்தாவது சொர்க்கத்தில்
சந்தோஷமாக இரு"... என்று சொல்லி
தூக்கில் போட்டுவிட்டான்.!

அதை கண்ணால் பார்த்த
மக்கள் அனைவரும் அதிருப்தியில்

இவன்லாம் ஒரு அரசனா....
இவ்வளவு அநியாயம் பண்றானே...
இவனுக்குலாம் நல்ல சாவே வராது...
செத்தா சொர்க்கத்துக்கு போகமாட்டான்..!
நரகத்துக்கு தான் போவான்...
என்று புலம்ப ஆரம்பிக்க....

அரசன் மக்களை பார்த்து
அடுத்து போட்டியில் கலந்துகொள்ள
துடிக்கும் அடிமுட்டாள் யாராவது இருக்கீங்களா..?
என்று கர்வமாக கேட்க...

கேட்ட அடுத்த நொடியே....
அரசனிடம் வேலை செய்யும்
அடிமுட்டாள்....
அரசனின் முன் வந்து நிற்க...

அரசன் அடிமுட்டாளைப் பார்த்து...

நான் அடிமுட்டாள் இருக்கீங்களான்னு
உன்ன கூப்பிடல மடையா...!
போட்டியில் கலந்துக்க போறாங்களானு
கேட்டேன்..!!.

அப்படியே நீ போட்டியில கலந்துக்கிட்டா...
அப்புறம் உன்ன யாரு தூக்குல போடுவா..?
என்று நக்கலாக கேட்க...

அரசபையில் உள்ள அனைவரும்...
சிரிகிறார்கள்...

அவமானத்தில் தலைகுனிந்த
அந்த அடிமுட்டாள்... அரசனிடம்

அரசே...
அரசனாகும் ஆசை எல்லாம் எனக்கு இல்லை...
ஒரு சின்ன சந்தேகம்...
அத கேட்டுட்டு போக வந்தேன்...
என்று கூற....

என்ன சந்தேகம்..?

மக்கள் அனைவரும்...
நீங்க செத்தா... நரகத்துக்கு தான்
போவீங்கன்னு சொல்றாங்க...!!

உங்களுக்கு...
சொர்க்கத்துக்கு போக ஆசையா..?
இல்ல... நரகத்துக்கு போக ஆசையா..?
என்று வெகுளியாக அடிமுட்டாள் கேட்க...!

உடனே அரசன்... சிரித்தவாறே...

இதிலென்ன சந்தேகம் முட்டாளே...
யாராக இருந்தாலும்..,
சொர்க்கத்துக்கு செல்லத்தான்...
ஆசைப்படுவார்கள்.. என்று கூற...

அடுத்த வினாடியே..
அந்த அடிமுட்டாள்...
அரசனைப் பார்த்து...

அப்படினா... உடனே என் கூட வாங்க...
இப்பவே உங்கள தூக்குல போட்டு...
சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சிடுறேன்...
என்று கூற...

அதைக்கேட்ட அரசன் கோபத்தில்...

யார் அங்கே...
இந்த அடிமுட்டாளை அடித்து துரத்துங்கள்
என்று கத்த....

என்ன அரசே....
சொர்க்கத்துக்கு போக ஆசைப்படுறீங்க...
அந்த ஆசையா நிறைவேத்த
சாக சொன்னா...
வேண்டாம்னு நினைக்கிறீங்க...
செத்தாத்தான சொர்க்கத்துக்கு போக முடியும்...
என்று அழுத்திக் கூற...

அரசன் கேட்ட கேள்விக்கு...
இப்ப பதில் கிடைத்து விட்டது.
வேறு வழியின்றி
அடிமுட்டாள் அரசனாகிறான்.....

இருந்தும்....
தான் அரசன் ஆன பின்பு கூட...
தன்னுடைய பழைய அரசனின்
ஆசையை நிறைவேற்ற...
அவனை தூக்கில் தொங்க விட்டான்
அந்த அடிமுட்டாள்.

செத்தாவது சொர்க்கத்தில்
சந்தோஷமாக இரு... என்று....

*********
எதை விதைத்தாயோ...
அதன் வழியே அறுபடுவாய்...
*********

Written_by
Spark Mrl K (க.முரளி)

Wednesday, 29 January 2020

எல்லாம் எங்க தலையெழுத்து..!!



ரொம்ப நாளா பொண்ணு தேடி
கிடைக்காத ஒருத்தன்...

புதுசா வரன் வந்திருக்குன்னு
பொண்ணு பார்க்க  கிளம்புறான்...

காலைல 7:30 லிருந்து 9 நல்ல நேரமாம்..

அதுக்குள்ள பொண்ண பார்த்தா
இந்த தடவ ஓக்கே ஆகிடும்னு நினைச்சி

குடும்பத்தோட காலைல 5 மணிக்கே
எந்திரிச்சி... குளிச்சி ரெடியாகி...
கரெக்ட்டா 7:30 க்கு கிளம்புற மாதிரி
கால் டேக்சியும் புக் பண்ணிட்டான்....

நேரம் ஆகிக்கிட்டே இருக்கும்
கடிகாரத்துல மணி 7:30 ம் ஆகுது
ஆனா... கால் டேக்சி இன்னும் வரல...

லேட்டானா...
நல்ல நேரத்துல பொண்ணு பார்க்க
முடியாம போயிடும்னு
கால் டேக்சி காரனுக்கு கால் பண்ணி
கடுப்புல பேசுறான்...

அதுக்கு கால் டேக்சி காரனோ...

சார்... இன்னைக்குன்னு பார்த்து
காலைலேயே ட்ராஃபிக்...
எப்படியும் இன்னும் 5 நிமிஷத்துல வந்துடுவேன்னு
அடிச்சி பிடிச்சி வாரான்....

இப்ப வண்டி வீட்டு வாசல்ல நிக்குது...

பொண்ணு பார்க்க...
டைம் ஆச்சேன்னு வேக வேகமா
வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்த குடும்பம்...
காரில் ஏற....

காரும்... அவங்க வந்த வேகத்துக்கு...
அங்கிருந்து கிளம்புது...
ஆனா.. திருவிழா தேர் மாதிரி
மெல்ல போகுது...

கால் டேக்சி டிரைவர் சொன்ன மாதிரியே
ரோடு ஃபுல்லா பயங்கர ட்ராஃபிக்...

நேரம் ஆகிக்கிட்டே போகுது...
இப்படியே போச்சினா...
நல்ல நேரம் போகுரதுக்குள்ள
அந்த பொண்ண பாக்க முடியாம
போயிடுமோன்னு ஒரு பயம்...

இதுக்கிடையில...
அந்த பொண்ணும் வீட்டுல இருந்து
2 தடவ கால் வந்துடுச்சி

அதுல டென்ஷன் ஆனா
பையனோட அப்பா...
கால் டேக்சி டிரைவர்கிட்ட  .

விதிய பாத்தீங்களா சார்...
நாம என்ன தான் கரெக்ட் டைம்னுக்கு
ரெடி ஆகி கிளம்பினாலும்...
அது... அது... நடக்குற படி தான் நடக்குது...

எல்லாம் எங்க தலையெழுத்து...
நமக்கு என்ன எழுதியிருக்கோ...
அத்துப்படி தான் நடக்கும்...
அத யாராலையும் மாத்த முடியாதுன்னு
புலம்ப ஆரம்பிச்சிட்டார்...

இவர் புலம்புறத கேட்க முடியாத டிரைவர்...
எப்படியாவது இறக்கி விட்டா போதும்டா சாமின்னு
சாலை விதியெல்லாம் மீறி.
சில சிக்னல்ல கூட நிக்காம
முடிஞ்சா வரைக்கும் வேகமா போறார்...

அப்பவும் புலம்புறத விடல...
விதிப்படிதான் அப்படி நடக்கும்
விதிப்படிதான் இப்படி நடக்கும்னு
பேசி தள்ளுறார்...

டைம் ஆகிக்கிட்டே இருக்கு...
வண்டியும் போய்க்கிட்டே இருக்கு...

மணி இப்ப 8:55 ஆகுது...
வண்டியும் கிட்டத்தட்ட
அந்த பொண்ணு வீட்டுக்கிட்ட போயிடுச்சி...

ரோட்டுக்கு அந்தப்பக்கம் பொண்ணு வீடு
இந்தப்பக்கம் வண்டி நிக்குது...

சிக்னல்ல யூடர்ன் போட்டு வரணும்னா
எப்படியும் பத்து நிமிஷம் ஆகும்...

அங்கயே இறங்கி ரோட்ட க்ராஸ் பண்ண
5 நிமிஷத்துல போயிடலாம்னு நினைச்சி
குடும்பமே வேக வேகமா இறங்கி
ரோட்ட க்ராஸ் பண்ணாம
ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டு
அங்கயே நிற்குது...

ரோட்டுல வண்டி..
அடுத்தடுத்து போய்க்கிட்டே இருக்கு...

அதப்பார்த்த பார்த்த டிரைவர்...

என்ன சார்... 4 நிமிஷம் தான் இருக்கு
இன்னும் போகாம நிக்கிறீங்க...?
நல்ல நேரம் முடிஞ்சிட போகுது...
சீக்கிரம் போங்க...
பொண்ணு வீட்டுல எல்லோரும் வெயிடிங்ன்னு
விளையாட்டா கேட்க...

அதுக்கு...
எல்லாம் விதிப்படிதான் நடக்கும்..
அத யாராலையும்...
மாத்த முடியாதுன்னு சொன்ன...
அதே பெரியவர்...

ரோட்டுல...
அடுத்தடுத்து நிற்காம போற வண்டிய
பார்த்துக்கிட்டே சொல்றார் ....

முதல்ல உன் வாய கழுவுடா....
கடைசி நேரத்துல... அபசகுனமா பேசிட்டு...

உம்பேச்ச கேட்டு உடனே போனா...
எங்க தலையெழுத்து.. இன்னைக்கே முடிஞ்சிடும்
ஒரு நிமிஷம் நின்னு போறதுல தப்பில்லன்னு
உயிர் பயத்துல பேச ஆரம்பிட்டார்...



********
எல்லாம் விதி என்று நினைப்பவர் கூட... 
சில நேரம்...
தன்னை அறியாமல்..
மதியால் வெல்ல முயற்சிக்கிறார்கள்...!!!
********

Written by
Spark Mrl K (க.முரளி)


நன்றி (வாசித்தமைக்கு)