Wednesday, 3 February 2021

வெள்ளிக்கிழமை ராமசாமி

 


சில நூறு வருஷத்துக்கு முன்னாடி 

பண்ணையார்புரம் என்ற 

பசுமையான கிராமத்துல

ஒரு ஜமீன் குடும்பம் வாழ்ந்து வந்தது.


அந்த ஊர்ல...

அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான 

ஒரு அம்மன் கோவில்....


கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேல  

பாழடைஞ்ச நிலையில....

திருவிழா எதுவும் நடக்காம...  

பூட்டியே கிடக்குது...  


காரணம்... 

யார் விட்ட சாபம்னு தெரியல...

திருவிழா நடத்தனும்னு முடிவு பண்ணிட்டா...


அத நடத்துற குடும்பத்துல  

நிச்சயம் ஒரு உயிர்பழி 

நடக்கும்... 

 

இப்படி இருக்கும் போது... 

ஒரு நாள் இரவு... 

அந்த ஊர் எல்லையில

வந்து நின்ன சாமக்கோடாங்கி... 

உடுக்கைய அடிச்சிக்கிட்டே... 


கெட்ட காலம் பிறக்கப் போகுது...

கெட்ட காலம் பிறக்கப் போகுது...

திருவிழா நடத்தாம... 

உயிர் பழிக்குப் பயந்து... 

ஆத்தாவ பட்டினி போட்ட 

காரணத்துக்காக ஊர் மக்களுக்கு 

கெட்ட காலம் பிறக்கப் போகுது... 

கெட்ட காலம் பிறக்கப் போகுதுன்னு 

சொல்லிட்டுப் போக.... 


அதை.... அரை தூக்கத்துல கேட்ட 

ஊர்க்காரனுங்க எல்லோரும்...

பீதியில... விடியக்காத்தால....  

ஜமீன் வீட்டு முன்னாடி போய் 

நிற்க.... 


ஜமீன்தார் ராமசாமி 

ஊர் மக்களை பார்க்க வெளிய வாரார்... 


ஊர்மக்கள் அனைவரும் 

ராமசாமியிடம் விவரத்தைக் கூற.... 


அதுவரை.... ஊர் மக்களிடம் 

சந்தோஷத்தை மட்டும் பார்த்த

ராமசாமிக்கு.... 


அவர்களது பீதிகலந்த 

பாவமான முகத்தை பார்க்கப் பிடிக்கல...


இளகுன மனசுக்காரரான ராமசாமிக்கு... 

உயிர்மேல பயம் இருந்தாலும்...!!!

தன்னோட உயிர்க்கு 

ஆபத்தே வந்தாலும் பரவாயில்லைன்னு  

ஊர்மக்களுக்காக

திருவிழா நடத்த முடிவு பண்றார்... 


வர்ற ஆடி வெள்ளி... 

தேர் இழுத்து திருவிழா நடக்கும்னு 

மக்கள் மத்தியில உறுதியா சொல்றார்...!


நாட்கள் மெல்ல நகருது... 

ஆடி வெள்ளியும் நெருங்கி வருது... 

மக்கள் எல்லோரும் 

சந்தோஷமா திருவிழாவ கொண்டாடுறாங்க... 


ஆனா ராமசாமிக்கு மட்டும்... 

தன்னோட உயிர்க்கு ஏதாவது ஆகிடுமோன்னு 

பயத்துலயே... பாதி உசுரு போய் 

படுத்த படுக்கையா ஆயிடுறார்...!


அப்ப தன்னோட மகன கூப்ட்டு... 


மகனே... ஒருவேளை நா செத்தாக்கூட்ட 

இந்த திருவிழா நிக்க கூடாது...!


ஏன்னா... 

மக்கள் முகத்துல... பலவருஷம் கழிச்சி 

திருவிழா கொண்டாட்டத்த பார்க்குறேன்... 

எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க...


நமக்கு... 

நம்மள நம்பி இருக்குறவங்களோட 

சந்தோசம் தான் முக்கியம்...!!


எனக்காக ஒரு சத்தியம் பண்ணிக்கொடுன்னு சொல்லி.. 

தன்னோட மகன் கிட்ட ராமசாமி  

கடைசி ஆசையா, ஒரு சாத்தியத்த வாங்கிட்டு 

செத்துப் போயிட்டார்...


அப்பா இறந்ததுக்கு அப்புறமா... 

மகன்... வாரிசின் அடிப்படையில 

ஜமின்தார ஆகுறான்... 


ஆனாவுடனே...

அப்பாக்கு பண்ண சத்தியத்த.... 

காப்பாத்தனும்னு  சொல்லிச்சொல்லி 

அந்த ஊர் மக்கள..... 

கொடுமை படுத்த ஆரம்பிக்கிறான்.!


மக்களும் ஒன்னுமே புரியல...!

ராமசாமி நல்லவராச்சே..!!

அவர் மகன் ஏன் இப்படி பண்றான்னு..!!!


யாராவது சின்னதா தப்பு பண்ணாக்கூட்ட 

பெருசா தண்டனை கொடுக்க ஆரம்பிக்கிறான்.. 


ஏன் இப்படி பண்ணுறேன்னு கேட்டா...

சாகுறதுக்கு முன்னாடி... 

எங்கப்பாவுக்கு பண்ணிகொடுத்த சத்தியத்த 

காப்பாத்த... 

எனக்கு வேற வழி தெரியலைன்னு சொல்லுவான்.


அதே நேரத்துல.... 


ஜாமீன்தார் ராமசாமி சாவுக்கு...

ஊர்மக்கள் திருவிழா நடத்த சொன்னதுதான் 

காரணம்... அதுக்கு பழிவாங்கத் தான் 

அவரோட பையன் இப்படி பண்றான்னு... 

ஊருக்குள்ள வதந்தியும் பரவ ஆரம்பிக்குது...


அதனாலயே...

ராமசாமியின் மகன் செத்தாத்தான்... 

ஊருக்கு விடிவுக்கலாமே பிறக்கும்னு.. 

ஊர்க்காரங்க எல்லோரும் பேச ஆரம்பிக்கிறாங்க...


யார் எப்படி சொன்னாலும் சரி... 

ராமசாமி மகன்.... 

சத்தியத்த காப்பாத்துறதுக்காக.... 

ஊர்காரங்கள கொடுமைப்படுத்துறத 

குறைக்கறதா இல்ல...!!.

நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே போக.... 


நாட்கள் மெல்ல நகர்ந்து... 

வருடங்களா மாறி... 

ராமசாமியின் மகனுக்கு வயசாகி... 

இப்ப படுத்த படுகையா கிடக்கான்.. 

 

வைத்தியரும் நாள் குறிச்சிட்டார்... 

வர்ற வெள்ளி தாண்டாதுன்னு... 


அதைக்கேட்ட ஊர்க்காரங்க எல்லோருக்கும் 

ஒரே சந்தோசம்.... 


ஏன்னா.. சனிப்பொணம் தனியா போகாது... 

வெள்ளிதானா... அவன் மட்டும் போவான்னு

நினைக்கும் போது... 


ஊர்க்காரங்கள பார்த்து...

ராமசாமியின் மகன் கேட்க்குறான்.


எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்களா..? 


அதுக்கு ஊருக்காரங்க எல்லோரும்... 


ஆமா... 

இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கோம்... 

நீ செத்ததுக்கு அப்புறமா... 

இன்னும் சந்தோஷமா இருப்போம்னு சொல்ல... 


ராமசாமியின் மகன்... 


எப்படியோ.... நல்லபடியா 

எங்கப்பாக்கு பண்ண சத்தியத்த 

நா காப்பாத்திட்டேன்... 

என்று கூற... 


ஊருக்காரங்களுக்கு ஒன்னும் புரியல... 


அப்படி என்னதாண்டா

உங்காப்பாக்கு நீ சத்தியம் 

பண்ணிக்கொடுத்தேன்னு.? கேட்க 


நாம சாகும் போதும் சரி... 

செத்ததுக்கு அப்புறமாவும் சரி... 

நம்மள நம்பி இருக்குற எல்லோரும் 

சந்தோஷமா இருக்கணும்னு 

எங்கப்பாக்கு பண்ண சத்தியத்த 

காப்பாத்திட்டேன்... 


நா சாகப்போறேன்னு தெரிஞ்சதும் 

எல்லோரும் சந்தோஷமாயிட்டீங்க..!

கண்டிப்பா செத்ததுக்கு அப்புறமா

சந்தோஷமா இருப்பீங்க..!!

எனக்கு அது போதும்னு சொல்லிட்டு செத்துட்டான்... 


“இவனுக்கு வேற வழி தெரியல ஆத்தா...

சத்தியத்த காப்பாத்த” 


Written by Murali K  (க.முரளி)


நன்றி (வாசித்தமைக்கு)

1 comment: