Monday, 9 November 2020

முட்டாள்த்தனமான புத்திசாலியும் புத்திசாலித்தனமான முட்டாளும்

ஒரு ஊரே ஒன்னு சேர்ந்து 

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள 

அந்த கிராமத்த விட்டே விரட்டி விடிக்குது... 


அவன் பேரு பார்த்தா...


இப்ப வேற வழியில்லாம 

பார்த்தா பக்கத்து ஊருக்கு போறான்


அந்த ஊருக்கு அடிக்கடி 

போய் வந்திருந்தாலும்.... 

அவனுக்குன்னு அங்க... 

யாரையும் தெரியாது... 


பசிக்க ஆரம்பிக்குது... 


கையில காசும் இல்ல... 

திருடி திங்க மனசும் இல்ல...


பசியோட... அந்த ஊருக்குள்ள 

மெல்ல நாடந்து போறான்... 


அந்த ஊருக்குள்ள 

முட்டாள்த்தனமான ஒரு புத்திசாலி 

ஒரு பெரியவர்... 


எப்ப வேணும்னாலும்... 

இந்த ஊர விட்டு இல்ல... உலகத்தை விட்டே 

போகுற நிலமையில

படுத்த படுக்கையா கிடக்கிறார்... 

அவர் பேரு சாரதி  


அந்த பெரியவர பொருத்தவரைக்கும்....

இந்த உலகத்துல... 

தான் மட்டுந்தான் புத்திசாலி.... 

மத்தவன் எல்லாம் முட்டாள்ன்னு 

ஒரு நினைப்பு...


ஆனா... அந்த பெரியவருக்கு... 

ஒரு நல்ல பழக்கம் இருக்கு..!!


என்னதான் உடம்பு சரியில்லைனாலும்... 

இரவு எத்தனை மணிக்கு தூங்கினாலும்... 

முந்தின நாள்... 

அதிகப்படியான வேலை செஞ்சிருந்தாலும்...  

தினந்தோறும் காலைல.... 

நாலு மணிக்குலாம் எந்திரிச்சி 

தன்னோட வழக்கமான வேலைய 

பார்க்க ஆரம்பிச்சிடுவார்.... 


இப்போ...

பசியோட நடந்து வந்த பார்த்தா.... 

சாரதியோட வீட்ட பார்குறான்... 


உள்ள இருந்து ஒரே இருமல் சத்தம்...

லொக்கு லொக்குன்னு  

வீட்டுக்கு வெளிய வரைக்கும் கேட்குது...


பார்த்தா... மெல்ல கதவ திறந்து 

எட்டிப்பார்க்க..... உள்ள சாரதி.... 


புத்திசாலித்தனமான முட்டாளும்... 

முட்டாள்த்தனமான புத்திசாலியும்... 

சந்திச்சிக்கிறாங்க...


பார்த்தாவை பார்த்த சாரதி... 

இருமிக்கிட்டே... யாருப்பா நீ...? 

பூட்டி இருக்குற வீட்ட 

திருடன் மாதிரி திறந்து பார்க்குற...!!

உனக்கு என்ன வேணும்..? 

என்று விசாரிக்க...


பார்த்தாவும்... நடந்த எல்லா விஷய்த்தையும் 

விலாவரியா சொல்றான்...


பார்த்தாவின் கதையை கேட்ட 

சாரதியின் மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடுது... 


இவன பார்த்தா.... 

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள மாதிரி தெரியல...

கடஞ்சி எடுத்த முட்டாள் மாதிரி தோணுது... 

மூணு வேளை சோறு போட்டா...

ஆயிசுக்கும் நமக்கு அடிமையா 

இருப்பான்னு நினைச்சி...


பசியோட வந்த பார்த்தாவுக்கு 

சாரதி, சோறு போட்டு... 

இனிமே நீ எங்கயும் போகவேண்டாம்... 

என்கூடவே இருந்திடு என்று கூற... 


பார்த்தாவும்... போக்கிடம் இல்லாம 

அங்கேயே தங்க முடிவு பண்றான்...


உடனே பார்த்தாவும் சாரதியை பார்த்து... 

சோறு போட்ட நன்றி விசுவாசத்துக்காக 


ஐயா... 

உங்களால முடியாத எல்லா வேலையையும் 

இனிமே நா பார்த்துக்கிறேன்...

உங்களுக்கு நிச்சயமா ஒத்தாசையா இருப்பேன் 

என்று கூற....


அதைக்கேட்ட சாரதி.... 

மகிழ்ச்சியோட பார்த்தவை வேலைக்கு 

வச்சிக்கிறார்.....  


அடுத்த நாள் காலை... 

சரியா மணி நாலு... 


இருமிக்கிட்டே சாரதி எந்திரிக்க... 

அந்த இருமல் சத்தம் கேட்டு 

பார்த்தாவும் எந்திரிக்க...


உடனே சாரதி.... 

பார்த்தாவை பார்த்து 


என்னடா அப்படி பாக்குற...  

தினந்தினம் நான் தான்... 

வீட்ட கூட்டி பெருக்குவேன்... 


இப்பலாம் என்னால அத செய்ய முடியல... 

இனிமே நீதா அத பண்ணனும் 

என்று கூற... 


அதற்கு பார்த்தா.... 


சரிங்க முதலாளி... 

என்று கூறிக்கொண்டே... 

எல்லா வேலையையும் செய்ய ஆரம்பிக்கிறான்... 


நாட்கள் மெல்ல நகர நகர... 

வேலையும் கூடிக்கிட்டே போகுது... 


சாரதி... 

தன்னால முடியாத எல்லா வேலையையும் 

பார்த்தாவ வச்சி செய்ய ஆரம்பிக்கிறார்...


ஏதாவது எதுத்து பேசினா... 


டேய் முட்டாப்பயலே... 

என்கிட்ட வேலைக்கு சேரும் போது... 

என்ன சொன்ன...?


ஐயா... 

உங்களால முடியாத எல்லா வேலையையும் 

இனிமே நா பார்த்துக்கிறேன்...

உங்களுக்கு நிச்சயமா 

ஒத்தாசையா இருப்பேன்னு சொன்னீல...?


மனுஷனுக்கு வாக்கு முக்கியம்டான்னு 

சொல்லிச் சொல்லி வேலை வாங்க... 


வாக்கு கொடுத்துட்டோமேன்னு 

அந்தப் பெரியவரால முடியாத 

எல்லா வேலையையும்  

பார்த்தா செய்ய ஆரம்பிக்கிறான்..   


ஒரு நாள் அந்த பெரியவருக்கு 

தீவிர உடம்பு சரியில்லாம போக...

வைத்தியர் வந்து பார்க்கிறார்... 


வைத்தியம் பார்த்த கையோட 

அந்த பெரியவர பார்த்து 

 

ஐயா... 

நா கொடுக்குற மருந்த சாப்ட்டு, 

நல்லா தூங்கி எந்திரிச்சாலே... 

பாதி சரியாகிடும்... என்று கூற 


அதற்கு சாரதி வைத்தியரை பார்த்து 


அதுதான இங்க பிரச்சனையே... 

அதிகாலை நாலு மணிக்கே 

எந்திரிச்சி பழகுன உடம்பு... 

திடீர்ன்னு வைத்தியர் சொன்னா கேட்குமா 

என்று கிண்டலாக சொல்ல... 


வைத்தியர்... வைத்தியம் பார்த்ததற்கு 

காச வாங்கிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்... 


அடுத்த நாள் காலை... 

வழக்கம் போல சாரதி எந்திரிச்சி பார்க்க... 

பக்கத்துல படுத்திருந்த பார்த்தாவ காணும்...!!


சுத்தி முத்தி தேடி பார்க்குறார்...

எங்க தேடியும் பார்த்தாவை காணும்... 


உடனே சாரதி... தனக்குத்தானே.... 

பார்த்தாவை பற்றி...


பயத்துல சொல்லாம கொள்ளாம 

ஓடிப்போய்ட்டானே... சோம்பேறிப்பயன்னு 

சொல்லி திட்டியபடி....


வேற வழியில்லாம தன்னோட வேலைய 

தானே பார்க்க ஆரம்பிக்கிறார்... 


நேரம் ஆகிக்கிட்டே போக... 

பகல் பொழுது விடிய ஆரம்பிக்குது.... 


இப்ப பார்த்தா.... சாரதியோட வீட்டுக்கு வாரான்... 


பார்த்தாவை பார்த்த சாரதி... 

கோபத்தில்... 

எங்கடா போன..? என்று கேட்க


அதற்கு பார்த்தா அமைதியாக... 


எல்லாம் உங்க உடம்பு சரியாகனும்னு  

வைத்தியர் சொன்ன ஒரு வேலைய 

பார்க்க போனேன்... என்று கூற 


ஓ.. பையன் ஓடிப்போக நினைக்கல...

நமக்காக ஒரு வேலை பார்க்கத்தான் 

போயிருக்கான்னு சாரதி சமாதானம்

ஆகிறார்...


அன்றைய நாள் மெல்ல நகர....

அடுத்த நாள் காலையும் 

பார்த்தாவை காணும்.... 


இப்படியே தினம் தினம் 

காலைல பார்த்தா காணாமல் போக... 


ஒரு நாள் கடுப்பான சாரதி... 

பார்த்தாவை பார்த்து.... 


டேய் தினமும் காலைல காணாம போயிடுற...

கேட்டா வைத்தியர் சொன்ன வேலையத்தான் 

பார்க்குறேன்னு பதில் சொல்ற...


இத்தன நாள் நீ எனக்காக 

வைத்தியர் சொன்ன வேலைய 

ஒழுங்க பார்த்திருந்தா.... 

என்னோட உடம்பு சரியாகிருக்கனும்... 


உண்மைய சொல்லு... 

தினமும் காலைல எங்க போற...? 

என்று அதட்டிக் கேட்க 


அதற்கு பார்த்தா சொன்ன பதில் 


முட்டாள்த்தனமாக இருந்தாலும்... 

சாரதிக்கு அப்ப தா புரிஞ்சது...

நாம இத்தன நாள் போட்ட கணக்கு 

தப்பு.... 


உண்மையிலேயே பார்த்தா 

வெறும் முட்டாள் இல்ல  

புத்திசாலித்தனமான ஒரு முட்டாள் தான்...


காரணம்... வைத்தியர் 

அந்தப் பெரியவர... நல்ல தூங்குனா 

உடம்பு பாதி சரியாகிடும்னு சொல்ல... 


பெரியவர் தூங்காததுனால... 

பாவம் அவருக்கு பதிலா... 

இவன் தூங்க போயிருக்கான்... 


சரி.... தூங்குறது தான் தூங்குற... 

நம்ம வீட்டுலேயே 

தூங்க வேண்டியது தானான்னு

கேட்டதுக்கு....


உங்க இருமல் சத்தத்துல... 

என்னோட தூக்கம் கலைஞ்சா...

உங்க உடம்பு... 

எப்படி சரியாகும்னு சொல்றான்... 


Story by  Murali K





6 comments: