Thursday, 2 March 2017

அம்மா தாயே...




அந்த கிழவிய
கோவில் வாசல்ல 
எப்பவுமே பாக்கலாம்...

எல்லோர்கிட்டையும்
கை நீட்டி 
காசு கேக்கும்...

கையிருப்பு 
ஒரே ஒரு சேலை...
ஒரு நெளிஞ்ச தட்டு...
நடக்க உதவியா ஒரு குச்சி...

அவ்வளவுதான் 
அவளோட சொத்து...

யாரையும் 
பாரபச்சம் பார்க்கமாட்டா...
வயது வித்யாசம் தெரியாது...

தன்னவிட 
சின்ன வயசுகாரியையும்...

"
அம்மா தாயே"ன்னு
பொய் சொல்லுவா...

வேற வழியில்ல...
வயித்த நிறப்பியாகணும்...

சாகுற வரைக்கும்
உயிர் வாழணும்...

அந்த கோவில்ல
அப்பப்ப 
அன்னதானம் போடுவாங்க...

வரிசையில
கோவிலுக்கு உள்ள இருந்து
அவள் அமர்ந்திருக்கும் வாசல்வரை
மக்கள் நிற்பாங்க...

அந்த சாம்பார், ரசம் வாசனை...
மூக்க துளைக்கும்...

சாப்படனும்னு ஆசையா இருக்கும்...
இருந்தாலும் 
அந்த இடத்த விட்டு
அசைய மாட்டா...

யாராவது 
அன்னதானம் என்ற பெயரில்...

தேடிவந்து பொட்டனத்தில்
சோறு கொடுத்தா வாங்கி தின்பா...

ஏன் அவ மத்தவங்ககிட்ட
கையேந்தணும்...

அவளுக்கு 
சூடு, சுரணை இல்லையா...?

இருந்திருக்கும்...

"
அம்மா"ன்னு 
கூப்பிட்ட ஒரு உறவு
அவள கைவிட்டு...

இப்ப இவ
மத்தவங்கள 
"
அம்மா தாயே"ன்னு
கூப்பிடாம இருந்திருந்தா...

அவளுக்கும் எல்லாம் இருந்திருக்கும்...

written by க.முரளி (spark MRL K)


No comments:

Post a Comment